லெனின் - 1
உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்டுகளும் கம்யூனிசத்தை அறிந்த தொழிலாளர்களும் மிக நன்கறிந்த நபர் யார் அவர்களுக்கு மிகப் பிடித்தமான நபர் யார் என்று கேட்டால் லெனின் என்று தயங்காமல் சொல்லி விடலாம். அவர்களது பார்வையில் லெனின்தான் அழகானவர்.
ஐந்தரை அடி உயரம், வழுக்கைத் தலை, பாசிமணி போன்ற கண்கள், குறுந்தாடி - இந்த உருவம் ரசியாவின் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது; கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் நேசத்துக்குரியதாக இருந்தது.
யார் இந்த லெனின்? அவரை இன்றைக்கு நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அவர் தலைமை வகித்து உருவாக்கிய சோவியத் ஒன்றியம் உடைந்து 15 குடியரசுகளாக பிரிந்து போய் 35 ஆண்டுகளுக்குப் பிறகு லெனின் வாழ்விலிருந்தும் பணியிலிருந்தும் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?
1870ஆம் ஆண்டில் ரசியாவில் பிறந்த லெனின் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடுமே ஜார் என்று அழைக்கப்பட்ட ரசியப் பேரரசனின் முற்றதிகார ஆட்சியின் பிடியில் திமிறிக் கொண்டிருந்தது. 1860ஆம் ஆண்டில் ரசியாவின் கிராமப் பகுதிகளில் விவசாயிகள் வட்டார நிலப்பிரபுவுக்கு கொத்தடிமையாக வேலை செய்ய வேண்டியிருந்த பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டிருந்தாலும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் பிரபுக்களுக்கு சாதகமாக நடத்தப்பட்டிருந்த பண்ணையடிமை ஒழிப்புச் சட்டம் விட்டு வைத்திருந்த பண்ணையடிமைத்தனத்தின் மிச்ச மீதிகளால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தனர். கிராமப் புறங்களில் இருந்து தப்பி நகரங்களுக்கு வந்தவர்களும் புதிது புதிதாகத் தோன்றியிருந்த கூலி உழைப்புக்கான முதலாளித்துவத் தொழிற்சாலைகளில் மிக மோசமான வேலை நிலைமைகளில் வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
நாடெங்கும் ஜார் மன்னன் மீதான பக்தியும், கிறித்தவ மத நம்பிக்கையும், மூடப் பழக்கவழக்கங்களும் கோலோச்சியிருந்தன.
1917ஆம் ஆண்டில் நிலைமை தலைகீழாக மாறியிருந்தது. ஜார் மன்னனின் ஆட்சி அந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களின் கொதித்தெழுந்த சினத்தால் தூக்கி எறியப்பட்டிருந்தது. அன்று கருக்கொண்ட ரசிய உழைக்கும் மக்களின் ஆட்சி அந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.
ரசியாவில் ஜார் மன்னனின் தலைநகராக இருந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்த நாடாளுமன்ற கட்டிடத்துக்கும் முன்னாள் அரண்மனைகளுக்கும் ஆட்சியாளர்களாக வந்தவர்கள் ரசியா முழுவதிலும் இருந்து வந்த விவசாயிகளின், தொழிலாளர்களின், படைவீரர்களின் பிரதிநிதிகள். அவர்கள்தான் ரசியாவையும் அதோடு இணைந்து சோவியத் ஒன்றியமாக உருவெடுத்த 14 குடியரசுகளையும் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு அரசாளப் போகிறவர்கள்.
மணி மகுடம் தரித்து பகட்டான ஆடை உடுத்தி விரல்களில் அழுக்கு படியாமல் வாழ்நாள் முழுவதும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உழைப்பின் பலன்களை கைப்பற்றி நுகர்ந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் மன்னர்களும் பிரபுக்குலத்தவர்களும் கோட்டு சூட்டு போட்ட கனவான்களும் ஆட்சி புரிந்த ஆட்சித் தலைமைப்பீடத்தில் உழைத்துக் காய்த்த கரங்களும் வெயிலில் கறுத்த முகங்களும் முரட்டுத் துணியணிந்த உடல்களும் கொண்ட தொழிலாளர்கள் விவசாயிகள் பிரதிநிதிகள் அமர்ந்தனர். உயர்ரக மதுவகைகளைக் குடித்துக் கொண்டு மேற்கத்திய நடனம் ஆடி விருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்த ஆடலரங்குகளில் ரசியாவின் வோட்கா சாராயத்தைக் குடிக்கும் ரசியாவின் மக்களின் பண்பாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனிதர்கள் நாட்டின் எதிர்காலத்தைத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
இது எப்படி நிகழ்ந்தது? இதற்கு யார் காரணம்? இது போன்ற கோடிக்கணக்கான மக்களின் செயல்களால் நடக்கும் மகத்தான சமூக மாற்றங்களுக்கு எந்த ஒரு தனிநபரையும் முழுமுதற்காரணமாகக் கூறுவது தவறாகவே இருக்கும். ஆனால் ரசியப்புரட்சியைப் பொறுத்தவரை அத்தகைய ஒரு மனிதராக லெனின் இருந்தார் என்று சொல்வது மிகையாகாது.
புரட்சி நடப்பதற்கு முந்தைய சுமார் 30 ஆண்டுகள், புரட்சி நடந்து தொழிலாளர்கள் விவசாயிகள் பிரதிநிதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதற்குப் பிந்தைய அவரது இறப்பு வரையிலான ஆறு ஆண்டுகள் - இந்தக் காலகட்டத்தில் அக்கால ரசியாவின் கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கூட்டாக முன்நோக்கிச் செல்ல வைத்தது லெனினின் அரசியல் இலக்கியப் பணிகள்தான்.
லெனின் தனது வாழ்நாளில் ரசிய அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளும் நூல்களும் துண்டறிக்கைகளும் தீர்மானங்களும் கடிதங்களும் 45 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அடங்கியுள்ள மொத்த பக்கங்கள் 25,000க்கும் மேல்.
சமூகத்தில் மனிதர்கள் தனிமனிதர்களாக வாழ்வதில்லை. அவர்கள் பல்வேறு வர்க்கங்களின் பகுதியாக வாழ்கின்றனர். இந்த வர்க்கங்களின் நோக்கங்களும் நலன்களும் ஒன்றுக்கொன்று எதிராகவோ பகையாகவோ அல்லது நட்பாகவோ இணக்கமாகவோ இருக்கலாம். ஆனால், தனிமனிதர் ஒவ்வொருவரும் தான் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவன், தான் சார்ந்த வர்க்கத்தின் நலன்கள் என்ன, தான் என்ன செய்ய வேண்டும், எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நேரடி அனுபவத்தில் இருந்து மட்டும் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் வெவ்வேறு வர்க்கங்களின் உறுப்பினர்களுக்கு தமது வர்க்க நிலையைப் பற்றிய உணர்வை ஊட்டும் பணியும் அந்த உணர்விலிருந்து அரசியல் மாற்றங்களை நோக்கிச் செலுத்தும் பணியும் சமூகத்தின் படித்த பிரிவினரிடம் உள்ளது. அத்தகைய படித்த வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர்தான் லெனின்.
அடக்குமுறை, கொடுங்கோன்மை, அரச வன்முறை, மரண தண்டனை, விவசாயிகளை சவுக்காலடிப்பது, மாணவர்களுக்கு கட்டாய இராணுவப் பணி தண்னை வழங்குவது என்று தமது வர்க்கத்தினரின் சுகபோக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக ஜார் மன்னரின் அதிகாரிகளும் பிரபுக்குலத்தவரும் முதலாளிகளும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருந்த. அந்த வர்க்கத்தை ஆதரித்து நின்ற படிப்பாளிப் பிரிவினர் அவற்றை நியாயப்படுத்தி ஜார் மன்னனின் ஆட்சியின் வடிவில் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் தமது அதிகாரத்தைத் தொடரும்படி கருத்தியல் பரப்புரை செய்து கொண்டிருந்தனர். ஆயிரக் கணக்கான நூல்கள், இலட்சக்கணக்கான அறிக்கைகள், அறிவிப்புகள் என மக்களின் சிந்தனையை முதலாளி வர்க்கத்தின் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் கருத்துகள் ஆட்சி செய்து கொண்டிருந்தன.
இந்த நேரத்தில் தனது 17 வயதில் கல்லூரி மாணவனாக அரசியல் அரங்கில் நுழைந்தார், தோழர் லெனின். ஜார் கொடுங்கோன்மை ஆட்சியால் கைது, கல்லூரியிலிருந்து வெளியேற்றம், போலீஸ் கண்காணிப்பில் சொந்த ஊரிலிருந்து வெளியேற்றப்படுதல் என்று அடக்குமுறைகளை எதிர்கொண்டு தொடங்கியது, அவரது வாழ்வு.
தானும் நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் இந்த நிலைமைகளுக்குக் காரணம் என்ன, இவற்றை பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு ஏற்றதாக எவ்வாறு மாற்றுவது என்ற கவலை எந்த ஒரு சமூகப் பற்றுள்ள மனிதரையும் போல லெனினுக்கும் ஏற்பட்டது. அதற்காக அவர் நாடியது மார்க்சியம். லெனின் பிறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மன் மொழியில் வெளியான நூல் மூலதனம். அதை எழுதியவர் கார்ல் மார்க்ஸ். அந்த நூல் அப்போது மேற்கு ஐரோப்பாவிலும் இன்று உலகம் முழுவதும் கோலோச்சி வரும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கு விதிகளை நுணுக்கமாக ஆய்வு செய்து முன்வைத்தது. கூலித் தொழிலாளர்களை ஒடுக்கிச் சுரண்டுவதன் மூலமே மூலதனம் பெருகுகிறது, அதன் மூலம் கூலித் தொழிலாளர்களை மேலும் ஒடுக்குகிறது. இறுதியில் மூலதனத்தின் ஆட்சியை வீழ்த்தும் சக்தியாக தொழிலாளி வர்க்கம் உருவெடுக்கிறது. இவ்வாறு அந்நூல் நிறுவியது.
ஜெர்மனியில் அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ உற்பத்தி முறை அதன் அண்டை நாடான ஜாரிச ரசியாவுக்கு அந்த நூற்றாண்டின் இரண்டாப் பாதியில் வளர்ச்சியடையத் தொடங்கியது. எனவே, ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அரசியல் பொருளாதார ஆக்கங்களை படித்த ரசிய இளைஞர்கள் ஆர்வத்துடன் வாசித்தனர். ரசியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் அவற்றை வாசித்தனர்.
அதே மரபில் லெனின் 1888ஆம் ஆண்டு மார்க்சின் மூலதனம் நூலை வாசித்தார். 1890ஆம் ஆண்டில் மார்க்சும் எங்கெல்சும் கூட்டாக எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ரசிய மொழியில் மொழிபெயர்த்து ஜார் ஆட்சியின் சட்டங்களை மீறி செயல்படும் வட்டங்களில் சுற்றுக்கு விட்டார். அரசாங்கத்தின் தடைகளையும் இடையூறுகளையும் தாண்டி 1892ஆம் ஆண்டில் ஒருவழியாக சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராக வேலை செய்ய உரிமம் பெற்றார் லெனின். ஆனால், நாட்டின் எதிர்காலம் பற்றிய அவரது கவலையும் சமூக அக்கறையும் அவரை அரசியல் வட்டங்களுக்குள்ளேயே இன்னும் தீவிரமாகத் தள்ளின.
1892-93 ஆண்டுகளில் லெனின் சட்டத்துக்குப் புறம்பான மார்க்சியப் படிப்பு வட்டங்களிலும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ஆலைத் தொழிலாளர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தனது நேரடி அரசியல் பணிகளைத் தொடங்கினார்.
அடுத்த 30 ஆண்டுகளில் அவரது பணி ரசியாவில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத்தையும் பற்றி தொழிலாளர்களுக்கு மார்க்சிய அடிப்படையிலான வர்க்கக் கண்ணோட்டத்தை அளிக்கும் வகையில் எழுதுவதாக இருந்தது. முதலில் அவர் தீர்க்க வேண்டியிருந்த சிக்கல், ரசியாவின் எதிர்கால வளர்ச்சி முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தீவிரப்படுத்துவதை நோக்கிச் செல்கிறதா அல்லது முந்தைய கிராம சமுதாயங்களை அடிப்படையாகக் கொண்டதா என்பது. அதனை அவர் ரசியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி என்ற தனது ஆய்வு நூலில் தீர்த்து வைத்தார். எழுதுவதற்கு பல ஆண்டுகள் பிடித்த இந்நூல் 1899இல் வெளியானது. அதற்குள் லெனின் அரசியல் நடவடிக்கைகளுக்காக கைது, சிறைவாசம், ரசியாவின் தொலைதூர சைபீரிய பகுதிக்கு நாடுகடத்தப்படுதல் என்று பல ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டார். மார்க்சிய தோழர்களுடனும் தொழிலாளி வர்க்க இயக்கத்துடனும் தனது தொடர்புகளை ஆழப்படுத்திக் கொண்டார்.
லெனினின் ஆக்கங்களில் ரசியாவில் முதலாளித்துவ வளர்ச்சி போன்ற அரசியல் பொருளாதார கோட்பாட்டு ஆய்வு நூல்களும் உண்டு; என்ன செய்ய வேண்டும் என்று கட்சித் தோழர்களுக்கு எழுதிய கோட்பாட்டு அறிக்கைகள் உண்டு; நாட்டுப்புற ஏழை மக்களுக்கு என விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை விளக்கி எழுதிய வெகுமக்கள் இலக்கியம் உண்டு; பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற தத்துவ அறிஞர்களை வியக்க வைத்த தத்துவ நூல்கள் உண்டு; அரசு - புரட்சி, ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம் ஆகிய ரசியாவை தொழிலாளி வர்க்கப் புரட்சியை நோக்கிய நகர்த்திய நூல்கள் உண்டு; ரசியப் புரட்சிக்குப் பின்னர் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் கோட்பாடுகளாக தேசியச் சிக்கல், கம்யூனிஸ்டுகளின் நடைமுறை அரசியல் (இடதுசாரி கம்யூனிசம், இளம் பருவக் கோளாறு), சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தை நோக்கிய பயணத்தில் அரசு முதலாளித்துவத்தின் வகிபாகம் (பண்ட வரி முறை பற்றி) ஆகிய நூல்கள் ரசியாவையும் உலகத் தொழிலாளி வர்க்கத்தையும் அடுத்த 50 ஆண்டுகளில் பயணிக்க வைத்த பாதையை தீர்மானித்தன.
இது பற்றி லெனினுடன் நெருக்கமாக வேலை செய்த தோழர்கள் ஜினோவீவ், லியோன் டிராட்ஸ்கி ஆகியோர் எழுதிய சிலவற்றைப் பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக