இந்தியாவில் ஜனநாயகப் புரட்சிக்கான திட்டம் - சாதி, தீண்டாமை ஒழிப்பு
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 15 பக்கங்களே கொண்ட "பாட்டாளிகள் - கம்யூனிஸ்டுகள்" என்ற இயலிலிருந்து
1. "பண்டைய உலகு அதன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பண்டைய மதங்களை கிறிஸ்தவ மதம் வெற்றிகொண்டது. பிறகு 18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதக் கருத்துகள் அறிவொளி இயக்கக் கருத்துகளுக்கு அடிபணிந்து அரங்கை விட்டகன்றன. அப்போது அக்காலத்திய புரட்சிகர வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமூகம் தனது மரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. மதச் சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம் ஆகிய கருத்துகள் கட்டற்ற சுதந்திரப் போட்டியின் ஆதிக்கத்தினது அறிவு உலகப் பிரதிமைகளே ஆகும். (பக்கம் 75, என்.சி.பி.எச் வெளியீடு, 2004)".
ஐரோப்பாவில் பண்டைய [பழங்குடி] மதங்களை கிறிஸ்தவ மதம் வெற்றிகொண்டது. இந்தியாவில் பண்டைய மதங்களை பார்ப்பன இந்து மதம் வெற்றி கொண்டது. பழங்குடிகளை சாதிகளாகப் பிரித்து படிநிலை ஏற்றத்தாழ்வு அடிப்படையிலான நால்வருண அடுக்குகளாகவும் அதற்கு வெளியிலான தீண்டப்படாத மக்களாகவும் பராமரித்துச் சுரண்டியது. அதை மதக் கொள்கையாக வரையறுத்தது. வேதங்களும் சாஸ்திரங்களும் இந்தப் படிநிலை ஏற்றத்தாழ்வு சமூகத்தை விதிக்கின்றன என்கிறது. நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்று இந்துக் கடவுளை பேச வைத்து வருகிறது.
கிறிஸ்தவம் பொருளாதார சுரண்டலுக்கான அடிமை முறையையும் நிலப்பிரபுத்துவ முறையையும் நியாயப்படுத்தினாலும் தொடக்க காலத்தில் இருந்தே கடவுளின் முன் அனைத்து கிறிஸ்தவர்களும் சமம் என்று முன் வைத்தது.
இந்த வேறுபாட்டையும் இதனால் இந்திய சமூகத்தின் புறநிலையில் உள்ள வேறுபாட்டையும் நீங்கள் மேற்கோள் காட்டிய கட்சித் திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்கிறதா?
ஐரோப்பாவில் கத்தோலிக்க கிறிஸ்தவம் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின் மதப் பிரதிபலிப்பாக இருந்தது. இந்தியாவில் இந்து மதம் எந்த உற்பத்தி முறையின் பிரதிபலிப்பாக இருந்தது. இந்தியாவில் அறிவொளி இயக்கக் கருத்துகள் 18ஆம் நூற்றாண்டில் எவ்வாறு பரவின? அவற்றுக்கு அடிபணிந்து இந்து மதக் கருத்துக்கள் அரங்கை விட்டகன்றனவா?
ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சியைப் பிரதிபலித்த புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் போல இந்தியாவில் உருவான மதம் என்ன?
2. 19ஆம் நூற்றாண்டில் மார்க்ஸ் இந்திய சமூகம் பற்றி சொன்னதைப் பார்ப்போம்.
”இந்த அமைதியான கிராம சமூகங்கள் சாதுக்களாக தோன்றிய போதிலும், கீழ்க் கண்ட கொடுங்கோன்மைகளுக்குத் திட்டமான அடிப்படையாக இருந்தன என்பதை நாம் மறக்க முடியாது; அந்த சமூகங்கள் மனித மூளையை சின்னஞ்சிறு கூட்டுக்குள் அடைத்து, மூடநம்பிக்கையின் சுலபமான கருவிகளாகவும், பரம்பரைச் சம்பிரதாய விதிகளின் அடிமையாகவும் ஆக்கியதையும், சகல வகைப்பட்ட சிறப்புகளையும் சரித்திர பூர்வமான சக்திகளையும் மனித மூளை பெறமுடியாமல் செய்ததையும் மறக்க முடியாது.
சின்னஞ்சிறு நிலத்தில் குவிந்து கொண்டு, சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சி அடைவதையும் வர்ணிக்க முடியாத கொடுமைகள் நிகழ்வதையும், பெரிய நகரங்களின் மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த காட்டுமிராண்டித்தனமான தன்னகங்காரத்தை நாம் மறக்க முடியுயாது. இயற்கையில் நிகழும் சம்பவங்கள் சம்பந்தமாக எவ்வளவு அக்கரறை காட்டினார்களோ அதே அளவு அக்கறையைத்தான் மேற்சொன்ன சம்பவங்கள் பாலும் காட்டினார்கள். தவிர எந்த ஆக்கிரமிப்பாளனுடைய கவனமாவது இதன் மீது விழுந்து விட்டால், இந்த சமூகங்கள் எதிர்க்க வகையில்லாமல் ஆக்கிரமிப்புக்கு இரையாகின. இந்த தேக்கம் நிறைந்த அசைவற்ற வாழ்க்கை – அகெளரவ வாழ்க்கை உருவாக்கும் திறனில்லாத செயலற்ற வாழ்க்கை – நேர்மாறான விளைவுகளையும் உருவாக்கியது.
கட்டுக்கடங்காத நாசகார சக்திகள் – நோக்கமில்லாமல் அழிக்கும் சக்திகள் குமுறி எழுந்தன.
இந்துஸ்தானத்தில் கொலையே ஒரு தெய்வச் சடங்காயிற்று. இதை நாம்மறக்கக் கூடாது. இந்த சிறு சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும் அடிமை முறையாலும் களங்கமடைந்திருந்தன. மனிதனை சூழ்நிலைக்கு எஜமானனாக்குவதற்கு பதிலாக அவனைச் சுற்றுச் சார்புக்கு அடிமைப்படுத்தின. தானாக வளர்ந்து கொண்டிருந்த சமூக நிலையை ஒருபோதும் மாறாத இயற்கை விதியாகச் செய்தன. இவ்விதமாக இயற்கையையே மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலைமையைச் உருவாக்கியது. இயற்கையின் எஜமானனாகிய மனிதன் குரங்காகிய அனுமான் முன்பும் பசுமாட்டின் முன்பும் தெண்டனிட்டு வணங்கியதில் இந்த சிறுமை காட்சியளித்தது. இவற்றையும் நாம் மறக்கக் கூடாது”. (இந்தியாவைப் பற்றி மார்க்ஸ், நியூயார்க் டெய்லி டிரிபியூன் கட்டுரையில்)
3. மீண்டும் அறிக்கையில் இருந்து
"பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத்துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது - கருத்துகளின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்? ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் அந்தச் சகாப்தத்தின் ஆளும் வர்க்கத்தினுடைய கருத்துகளாகத்தானே எப்போதுமே இருந்திருக்கின்றன?" (பக்கம் 75)
[What else does the history of ideas prove, than that intellectual production changes its character in proportion as material production is changed? The ruling ideas of each age have ever been the ideas of its ruling class. - Page 61]
இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துகள் என்னவாக இருக்கின்றன? தலைவிதி, மறுபிறவி, கருமா, பாவம், புண்ணியம், பார்ப்பனரின் மேன்மை இவை எல்லாம் இந்துக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. வேலை இழந்த ஐ.டி தொழிலாளி சங்கமாகச் சேர்ந்து போராட முன்வராமல், கோயிலுக்கு பரிகாரம் செய்யச் செல்கிறார். அமெரிக்காவுக்குப் போன பிறகும் சொந்த ஊருக்கு வந்து மதச் சடங்குகளை செய்வதுதான் தனது வாழ்வை மேம்படுத்தும் என்று கருதுகிறார்.
இந்தக் கருத்துகளை இந்திய ஆளும் வர்க்கம் திரைப்படங்கள் மூலமாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் (இராமாயணம், மகாபாரதம், சோட்டா பீம் முதலியன) 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறது. அசோக் நகர் பள்ளியில் பூர்வஜன்ம பாவத்தைப் பற்றியும் மறுபிறவி பற்றியும் பேசிய மகாவிஷ்ணுவும் அதற்குக் கைத்தட்டிய மாணவியரும் இதைப் பிரதிபலிக்கின்றனர்.
3. "சமூகத்தைப் புரட்சிகர முறையில் மாற்றிடும் கருத்துகள் என்பதாய்ச் சொல்கிறார்களே, அவர்கள் உண்மையில் குறிப்பிடுவது என்ன? பழைய சமூகத்தினுள் புதியதன் கூறுகள் படைத்துருவாக்கப்பட்டுவிட்டன. பழைய வாழ்நிலைமைகள் சிதைவதற்கு ஒத்தபடி பழைய கருத்துகளும் கூடவே சிதைகின்றன என்ற உண்மையைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்" (பக்கம் 75)
[When people speak of the ideas that revolutionise society, they do but express that fact that within the old society the elements of a new one have been created, and that the dissolution of the old ideas keeps even pace with the dissolution of the old conditions of existence. [Page 61]
இந்தியாவில் சமூகத்தைப் புரட்சிகர முறையில் மாற்றிடும் கருத்துகள் மேலே சொன்ன பழைய சமூகத்தினுள் புதியதன் கூறுகள் படைத்துருவாக்கப்பட்டிருக்கின்றனவா? அவை என்ன? அவற்றுக்கு எதிராக, பழைய வாழ்நிலைமைகளை சிதைய விடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கங்கள் மீட்டுருவாக்கிக் கொண்டிருக்கும் பழைய கருத்துகள் என்ன?.
4. அறிக்கையிலிருந்து
"கம்யூனிஸ்டுகளின் கோட்பாட்டு முடிவுகள் உலகைப் புத்தமைக்க நினைக்கும் இந்த அல்லது அந்தச் சீர்திருத்தாளர் புனைந்து வைத்தோ, கண்டுபிடித்தோ கூறிய கருத்துக்களை அல்லது கொள்கைகளை எவ்வகையிலும் அடிப்படையாகக் கொண்டவையல்ல.
நடப்பிலுள்ள வர்க்கப் போராட்டத்திலிருந்து தம் கண்ணெதிரே நடைபெற்று வரும் வரலாற்று இயக்கத்திலிருந்து உதிக்கும் மெய்யான உறவுகளையே இந்த முடிவுகள் பொதுப்பட எடுத்துரைக்கின்றன."
(பக்கம் 65, என்.சி.பி.எச் வெளியீடு, 2004)
[The theoretical conclusions of the Communists are in no way based on ideas or principles that have been invented, or discovered, by this or that would-be universal reformer. They merely express, in general terms, actual relations springing from an existing class struggle, from a historical movement going on under our very eyes. - Page 51, NBA edition, 1993]
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தொடங்கி 20ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு முதலான மாநிலங்களில் முன்னணி பாத்திரம் வகித்த பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம், அண்ணல் அம்பேத்கரின் அரசியல் போராட்டங்களில் இருந்தும் கோட்பாட்டு ஆய்வுகளில் இருந்தும் எழுந்த தீண்டப்படாத மக்களின் வாழ்வுரிமை இயக்கம் என நம் கண்ணெதிரே நடைபெற்று வரும் வரலாற்று இயக்கத்திலிருந்து உதித்த மெய்யான உறவுகளாக உள்ளன.
அதாவது, இந்தியாவில் நடப்பிலுள்ள வர்க்கப் போராட்டம், இருபிறப்பாளர் சாதிகள் (பார்ப்பனர், வைசியர், சத்திரியர்) ஒரு புறமும் இருபிறப்பாளர் அல்லாத சாதி இந்துக்கள் (சூத்திரர்) ஒரு புறமும் தலித்துகள் (தீண்டப்படாதோர்) ஒரு புறமும் என நடந்து கொண்டிருக்கிறது.
எனவே, கம்யூனிஸ்டுகளின் கோட்பாட்டு முடிவுகள் நம் கண்ணெதிரே நடைபெற்று வரும் வரலாற்று இயக்கத்திலிருந்து உதிக்கும் மெய்யான உறவுகளை பொதுப்பட எடுத்துரைக்க வேண்டும்.
5. இல்லை இல்லை, இந்தியாவில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் நிலைநாட்டப்பட்டு விட்டன என்று சொன்னால், அந்த உறவுகள் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற முதலாளித்துவ ஜனநாயகக் கருத்தினங்களாகவும் நடைமுறையாகவும் வெளிப்படுகின்றனவா?.
மூலதனம் நூலில் மார்க்ஸ் சரக்கு உற்பத்தி சமூகத்துக்கான முன்தேவையாக எதை வைக்கிறார் என்று பாருங்கள்
"ஆயினும், சரக்குகளுக்கு மதிப்பை உரித்தாக்குவது சமமான மனித உழைப்பாக, ஆதலால் சம பண்புடைய உழைப்பாக உழைப்பு அனைத்தையும் தெரிவிக்கிற ஒரு முறைதான் என்பதைப் பார்க்க விடாமல் அரிஸ்டாட்டிலை ஒரு முக்கிய நிலைமை தடுத்து விட்டது. கிரேக்க சமுதாயம் அடிமை முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது; எனவே, மனிதர்களின் சமத்துவம் இன்மையையும், அவர்களது உழைப்புச் சக்திகளின் சமத்துவம் இன்மையையும் தன் இயற்கை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
மதிப்புத் தெரிவிப்பின் இரகசியத்தை, அதாவது எல்லா உழைப்பு வகைகளும், அவை பொதுவான மனித உழைப்பாக இருக்கின்ற காரணத்தாலும், இருக்கின்ற அளவிலும் சமமானவை, சமதையானவை என்ற இரகசியத்தை - மனித சமத்துவமென்ற கருத்து கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கை போல் நிலைத்து விடாத வரை - வெளிப்படுத்த முடியாது. ஆயினும், உழைப்பினது உற்பத்தியின் பெருந்திரளானது சரக்குகளின் வடிவத்தை மேற்கொள்கிற ஒரு சமுதாயத்தில்தான், ஆதலால் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஆளுகிற உறவு சரக்குடைமையாளர்களின் உறவாக இருக்கிற ஒரு சமுதாயத்தில்தான் இது சாத்தியம்."
[...an important fact which prevented Aristotle from seeing that, to attribute value to commodities, is merely a mode of expressing all labour as equal human labour, and consequently as labour of equal quality. Greek society was founded upon slavery, and had, therefore, for its natural basis, the inequality of men and of their labour powers. The secret of the expression of value, namely, that all kinds of labour are equal and equivalent, because, and so far as they are human labour in general, cannot be deciphered, until the notion of human equality has already acquired the fixity of a popular prejudice. This, however, is possible only in a society in which the great mass of the produce of labour takes the form of commodities, in which, consequently, the dominant relation between man and man, is that of owners of commodities - page 65, Capital Volume 1, Progress Publishers]
இந்திய சமூகம் சாதிய முறையையும் தீண்டாமையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மனிதர்களின் சமத்துவம் இன்மையையும் அவர்களது உழைப்புச் சக்திகளின் சமத்துவம் இன்மையையும் தன் இயற்கை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
எனவே, எல்லா உழைப்பு வகைகளும் அவை பொதுவான உழைப்பாக இருக்கின்ற காரணத்தாலும் இருக்கின்ற அளவிலும் சமமானவை சமதையானவை என்பது மனித சமத்துவமென்ற கருத்து கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கை போல் நிலைத்து விடவில்லை. இந்நிலையில் இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி குறைபட்ட நிலையில்தானே இருக்க முடியும்.
6. அப்படியானால், இந்தியாவில் தொழிலாளி வர்க்கக் கட்சியான கம்யூனிஸ்டு கட்சியின் முதற்கடமை என்ன?
மீண்டும் மூலதனம் நூலில் இருந்து
"வட அமெரிக்காவின் ஐக்கிய அரசில், அடிமை முறை குடியரசின் ஒரு பகுதியை விகாரமாக்கிக் கொண்டிருந்த வரை தொழிலாளர்களின் சுயேச்சையான இயக்கம் ஒவ்வொன்றும் முடக்கப்பட்டது. உழைப்பானது கறுப்புத் தோலில் அடிமைச் சூட்டால் வடுப்பட்டுள்ள இடத்தில் வெள்ளைத் தோலிலும் விடுதலை பெற முடியாது. ஆனால், அடிமை முறையின் மரணத்தில் இருந்து உடனே பிறந்தது புதிய வாழ்க்கை. உள்நாட்டுப் போரில் விளைந்த முதற்பலன் எட்டு மணி நேரக் கிளர்ச்சி; இரயில் எஞ்சின் வேகத்தில் இந்தக் கிளர்ச்சி அட்லான்டிக்கிலிருந்து பசிபிக்குக்கு, நியூ இங்கிலாந்திலிருந்து கலிபோர்னியாவுக்கு அதிவிரைவாய்ப் பரவியது." (பக்கம் 408)
[In the United States of North America, every independent movement of the workers was paralysed so long as slavery disfigured a part of the Republic. Labour cannot emancipate itself in the white skin where in the black it is branded. But out of the death of slavery a new life at once arose. The first fruit of the Civil War was the eight hours’ agitation, that ran with the seven- leagued boots of the locomotive from the Atlantic to the Pacific, from New England to California. - Page 284]
இந்தியாவில் தொழிலாளர்களின் சுயேச்சையான இயக்கம் ஒவ்வொன்றும் ஏன் முடக்கப்பட்டுள்ளது? ஏனென்றால், உழைப்பானது தீண்டாமையின் வடிவில் வடுப்பட்டுள்ள இடத்தில் தீண்டப்படும் தொழிலாளர்களும் விடுதலை பெற முடியாது. தீண்டாமையையும் சாதியப் படிநிலை ஏற்றத் தாழ்வும் மரணிக்கும்போதுதான் புதிய வாழ்க்கை பிறக்க முடியும்.
இதை ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் திட்டம் புறக்கணிக்க முடியுமா?
கருத்துகள்
கருத்துரையிடுக