இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்

 

"தீண்டாமையும் சாதியும் உலகளாவியவை எனவே இந்தியாவில் இந்து மதத்தின் கொடுமைகள் ஒன்றும் தனியாக ஆய்வு செய்ய வேண்டியவை அல்ல" என்ற பொதுவானதற்கும் குறிப்பானதற்கும் இடையிலான உறவைப் புறக்கணிக்கும் (மார்க்சியமற்ற) கருத்துகள் ஒவ்வொன்றுக்கும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் அம்பேத்கர் தமது ஆய்வில் ஒவ்வொன்றாக பதிலளித்திருக்கிறார்.

புதியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள ஒவ்வொரு வாசகரும் அதை நேர்மையுடன் படித்தால், ஏற்கனவே விடையளிக்கப்பட்ட கேள்விகளை மீண்டும் மீண்டும் அசைபோட்டுக் கொண்டு அரசியல் கடமைகளை திசைமாற்றுவதை நிறுத்திக் கொள்ள முடியும்.

"தீண்டப்படாதோர்: அவர்கள் யார்? அவர்கள் ஏன் தீண்டப்படாதோர் ஆனார்கள்?" (Untouchables: Who were they? How They Became Untouchables) என்ற ஆய்வு நூலின் பொருளடக்கத்தைத் தருகிறேன். அது உங்கள் ஜப்பான், பிரான்ஸ் ஐயங்களுக்கு நேரடியாக விடை சொல்வதைக் காணலாம். (இடைக்குறிப்பாக, இந்தியாவில் தீண்டாமை பற்றி ஆய்வு செய்வதற்காக எழுதப்பட்ட ஒரே நூல் இதுதான் என்பதைச் சொல்லி வைக்கிறேன். மற்ற ஆய்வுகள் எல்லாம் தீண்டாமையை பல சிக்கல்களில் ஒன்றாக போகிற போக்கில் விளக்கிச் செல்கின்றன, போதுமான அக்கறையின்றி தவறாக விளக்குகின்றன).

நேரடியாக, பகுதி 4 எடுத்துக் கொண்டு கேள்விகளை எழுப்பாமல், முதல் மூன்று பகுதிகளில் அந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் விடை சொல்லப்பட்டிருப்பதைக் கவனித்துப் படியுங்கள்.

பகுதி 1 ஓர் ஒப்பீட்டு ஆய்வு

இயல் 1 இந்துக்களல்லாதவர்கள் - தீண்டாமை

இயல் 2 இந்துக்கள் - தீண்டாமை

பகுதி 2 வசிப்பிடம் தொடர்பான சிக்கல்

இயல் 3 தீண்டப்படாதோர் கிராமத்துக்கு வெளியே வசிப்பது ஏன்?

இயல் 4 தீண்டப்படாதோர் சிதறுண்ட மனிதர்களா?

இயல் 5 இதுபோன்று வேறு எங்கேனும் நடைபெற்றிருக்கிறதா?

இயல் 6 பிற இடங்களில் சிதறுண்ட மனிதர்களின் குடியிருப்புகள் எவ்வாறு மறைந்தன?

பகுதி 3 தீண்டாமையின் தோற்றம் - பழைய கோட்பாடுகள்

இயல் 7 தீண்டாமையின் தோற்றுவாய் - இனவேறுபாடு

இயல் 8 தீண்டாமை - தொழில் தோற்றுவாய்

பகுதி 4 தீண்டாமையின் தோற்றுவாய் - புதிய கோட்பாடுகள்

இயல் 9 தீண்டாமைக்கு மூல காரணம் - பௌத்தர்கள் மீதான வெறுப்பு

இயல் 10 தீண்டாமைக்கு மூல காரணம் - மாட்டிறைச்சி உண்பது

பகுதி 5 புதிய கோட்பாடு - சில உரையாடல்கள்

இயல் 11 இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா?

இயல் 12 பார்ப்பனல்லாதோர் மாட்டிறைச்சி உண்பதை ஏன் கைவிட்டார்கள்?

இயல் 13 பார்ப்பனர்கள் மரக்கறி உண்பவர்களாக ஏன் மாறினார்கள்?

இயல் 14 மாட்டிறைச்சி உண்பது சிதறுண்ட மனிதர்களை ஏன் தீண்டப்படாதோராக்க வேண்டும்?

பகுதி 6 தீண்டாமை - அது தோன்றிய  காலம்

இயல் 15 தூய்மையற்றோர் - தீண்டப்படாதோர்

இயல் 16 சிதறுண்ட மனிதர்கள் எப்போது தீண்டப்படாதோராயினர்?

மூலதனம் நூலின் முதல் தொகுதி, முதல் இயலில் "இந்தியாவைப் பற்றி" மார்க்ஸ் எழுதியவை

===================================================================

பிற்காலத்தில் இந்திய "மார்க்சிய" வரலாற்று ஆசிரியர்கள் மார்க்சைப் பழித்தது போல "இவை போகிற போக்கில், காலனிய ஆட்சியாளர்களின் தவறான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை" அல்ல.

மார்க்ஸ் பல முறை சரிபார்த்து திருத்தி எழுதி (குருண்ட்ரிச, 1859 நூல், 1867 ஜெர்மன் முதல் பதிப்பு, 1872 ஜெர்மன் இரண்டாம் பதிப்பு, 1875இல் பிரெஞ்சு பதிப்பை நிறைவு செய்வது, அதன்பின்னர் மூன்றாம் ஜெர்மன் பதிப்புக்கு குறிப்புகள் விட்டுச் சென்றது), தனது இறுதி நாட்கள் வரை சரிபார்த்துக் கொண்டிருந்த உரை.

1. புராதன இந்திய கிராம சமுதாயத்தில் (primitive Indian community) சரக்கு-உற்பத்தி இல்லாமலே சமூக உழைப்புப் பிரிவினை உள்ளது.

- பக்கம் 68

இங்கு ஜப்பான் சமுதாயத்தைப் பற்றிப் பேசவில்லை, பிரான்ஸ் சமுதாயத்தைப் பற்றிப் பேசவில்லை, புராதன இந்திய கிராம  சமுதாயத்தைப் பற்றிப் பேசுகிறார். சரக்குகளின் உற்பத்தி பற்றிப் பேசும் போது தொடர்பில்லாமல் ஏன் இந்தியா மட்டும் இங்கு வர வேண்டும்?

2. பொதுச்சொத்து அதன் ஆதிகால வடிவத்தில் குறிப்பாக ஒரு ஸ்லோவோனிய வடிவமே, அல்லது சிறப்பாகவே கூட ரசிய வடிவமே என்ற பரிகசிக்கத்தக்க அனுமானம் சமீப காலத்தில் பரவியிருக்கிறது. ரோமானியர்கள், டூட்டானியர்கள், கெல்டுகள் ஆகியோர் மத்தியில் நிலவியிருக்கும் ஆதிகால வடிவம் இது என்பதை நாம் நிரூபிக்க முடியும்; இந்த நாள் வரையிலும் கூட எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை - அவை சிதிலங்களே என்றாலும் - இந்தியாவில் காண்கிறோம்.  ஆதிகாலப் பொதுச் சொத்தின் வெவ்வேறு வடிவங்களிலிருந்து அதன் குலைவின் வெவ்வேறு வடிவங்கள் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது எவ்வாறு என்பதை பொதுச் சொத்தின் ஆசிய வடிவங்களையும் குறிப்பாக இந்திய வடிவங்களையும் மேலும் முழுமையாகப் பயில்வது காட்டும். இவ்வாறு, எடுத்துக் காட்டாக ரோமானிய, டூட்டானிய தனிச்சொத்தின் பல்வேறு மூல மாதிரிகள் இந்தியப் பொதுச் சொத்தின் வெவ்வேறு வடிவங்களிலிருந்து ஊகிக்கத் தக்கவையாகும். (கார்ல் மார்க்ஸ், “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு", பக்கம் 10.)

- பக்கம் 114-5, அடிக்குறிப்பு 38

இது சரக்கு உற்பத்தி இல்லாத நிலைமைகளில் சரக்குகளின் மாய்மாலம் இருப்பதில்லை என்று மார்க்ஸ் தரும் நான்கு நேர்வுகளில் ஒன்றைப் பற்றிப் பேசும்போது சொல்வது.

"இந்த நாள் வரையிலும் கூட எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை - அவை சிதிலங்களே என்றாலும் - இந்தியாவில் காண்கிறோம். ஆதிகாலப் பொதுச் சொத்தின் வெவ்வேறு வடிவங்களிலிருந்து அதன் குலைவின் வெவ்வேறு வடிவங்கள் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது எவ்வாறு என்பதை பொதுச் சொத்தின் ஆசிய வடிவங்களையும் குறிப்பாக இந்திய வடிவங்களையும் மேலும் முழுமையாகப் பயில்வது காட்டும்."

அதாவது, எவ்வாறு இராகோஸ்களிடையே நிலவிய [19ஆம் நூற்றாண்டில்] புராதன பொதுவுடைமை சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்து மற்ற சமூகங்களின் வரலாற்றுக்கு முந்தைய உற்பத்தி முறையைப் பற்றி கற்கிறோமோ அது போல இந்தியாவில் நிலவிவந்த பொதுச்சொத்தின் வடிவங்களை [19ஆம் நூற்றாண்டில்] மேலும் முழுமையாகப் பயில்வதன் மூலம் ரோமானிய டூட்டானிய தனிச்சொத்தின் மூல மாதிரிகளைக் கற்றுக் கொள்ளலாம் என்கிறார் மார்க்ஸ்.

அப்படி மார்க்ஸ் காட்டிய வழியில் ஆய்வு செய்யாமல், இந்து மதத்துக்கும் நால்வருண படிநிலை ஏற்றத்தாழ்வுக்கும் குற்றமன்னிப்பு வழங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டது/ஈடுபடுவது ஏன்? அது சங்கிகளுக்கு உவப்பானதா, இல்லையா?

இந்தியாவைப் பற்றிக் குறிப்பாகப் பேசுவதையே மார்க்சியத்துக்கு எதிராகப் பார்க்கும் இந்து "மார்க்சிஸ்டுகள்", மார்க்ஸ் இந்திய கிராம சமுதாயங்களை பல இடங்களில் (இங்கு மட்டுமில்லை மூலதனம் முதல் தொகுதியில் உழைப்புப் பிரிவினை பற்றிய புகழ்பெற்ற மேற்கோளிலும், இரண்டாம் தொகுதியில் பசுவை பாதுகாக்க வேண்டும் என்று இந்து மானவ தருமம் சொல்வதை மேற்கோள் காட்டும்போதும், மூன்றாம் தொகுதியில் கடுவட்டியின் தாக்கத்தில் ஆசிய சொத்துடைமை வடிவங்கள் அழிந்து போகாமல் நீடித்திருக்கிறது எனும்போதும்) குறிப்பிடுகிறார், இந்தியாவைப் பற்றி தனிச்சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

மேற்கு ஐரோப்பாவைப் போல அல்லாமல் இந்தியாவில் ஆசியபாணி உற்பத்தி முறை மாற்றமின்றி (அதுதான் வரலாறற்ற இந்தியா என்பதன் பொருள், மாற்றமே இல்லை என்ற இயக்க மறுப்பியல் அல்லது மாறாநிலைக் கோட்பாடு இல்லை) காலங்காலமாக நீடித்திருப்பதன் சமூக அடித்தளத்தை மார்க்ஸ் பல இடங்களில் கோடிட்டுக் காட்டுகிறார். இன்னும் விரிவாக வேண்டுமானால், குருண்ட்ரிசவில் மூன்றுவகை பண்டைக்கால சொத்துடைமை வடிவங்களைப் பற்றியப் பகுதியையும் படித்துப் பாருங்கள்.

மார்க்சின் கூருணர்வு நிறைந்த இந்த மதிப்பீடுகளைப் புறக்கணித்து விட்டு இந்தியாவுக்கு தனித்தன்மை எதுவும் இல்லை, இங்கும் நிலப்பிரபுத்துவம்தான், இந்து மதமும் பௌத்தமும் ஒண்ணு (இதை அறியாதவன் வாயில் மண்ணு) இந்து மதத்துக்கும் கிறித்தவத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பது யாருக்கு சேவை செய்கிறது?

1. இந்தியாவில் நிலவிய பழங்குடி சமூக சொத்துடைமை முறை

2. ரோமானிய பழங்குடி சொத்துடைமை முறை

3. ஜெர்மானிய பழங்குடி சொத்துடைமை முறை.

இந்த மூன்றிற்கும் இடையேயான வேறுபாடுகள் மார்க்சால் தெளிவாக சுட்டிக் காட்டப்படுகின்றன. அவற்றில் இந்திய சமூகத்தைப் பற்றிய குறிப்புகளை மட்டும் பார்க்கலாம்.  [இது தொடர்பான மார்க்சின் முழுக் குறிப்புகளையும் படிக்க விரும்புபவர்கள். https://www.marxists.org/archive/marx/works/1857/precapitalist/index.htm -க்கு போய் படித்து சரிபார்த்துக் கொள்ளவும்]

குருண்ட்ரிச நூலில் இந்தப் பகுதியின் தலைப்பு "Forms which preced capitalist production (concerning the process which precedes the formation of the capital relation or of original accumulation) Exchange of labour for labour rests on the worker's propertylessness"

"முதலாளித்துவ உற்பத்தி முந்தைய வடிவங்கள் (மூலதன உறவுகள் உருவாவதற்கு முன்பிருந்த நிகழ்முறை பற்றி அல்லது ஆதித் திரட்சி பற்றி) உழைப்புக்குப் பதிலாக உழைப்பை பரிவர்த்தனை செய்து கொள்வது தொழிலாளரின் சொத்து இல்லாமையை அடிப்படையாகக் கொண்டுள்ளது"

இந்தப் பகுதிக்கு முந்தைய பகுதியின் உள்தலைப்பு "(Parenthesis on inversion of the law of property, real alien relation of the worker to his product, division of labour, machinery)"

(சொத்துடைமை பற்றிய விதி எதிர்மறையாவது, தொழிலாளருக்கும் அவரது உற்பத்திப் பொருளுக்கும் இடையேயான உண்மையான அன்னியமான உறவு, உழைப்புப் பிரிவினை, எந்திரங்கள் பற்றி இடைக்குறிப்பு).

இதற்கு அடுத்த பகுதியின் தலைப்பு "Circulation of capital and circulation of money" "மூலதனத்தின் சுற்றோட்டமும், பணத்தின் சுற்றோட்டமும்"

எனவே, இந்தப் பகுதியில் மார்க்சின் முக்கியமான நோக்கம், முதலாளித்துவத்துக்கு முந்தைய சொத்துடைமை உறவுகள் அனைத்தும் ஒரு புறமும் முதலாளித்துவ சொத்துடைமை உறவு மறுபுறமும் வைத்து இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை பரிசீலிப்பது. அந்த வகையில் முந்தைய சொத்துடைமை வடிவங்களின் பொதுத்தன்மைகளை வந்தடையும் அதே நேரத்தில் அவற்றுக்கு இடையேயான வேறுபாட்டையும் அழுத்தமாக சொல்லிச் செல்கிறார். இந்திய சமூகம் பற்றி ஆய்வு செய்யும் எவர் ஒருவரும் இந்த குறிப்புகள் முன் வைக்கும் பிற சொத்துடைமை வடிங்களுடனான ஒற்றுமையின் அடிப்படையில் இந்திய சமூகத்தை வரையறுக்க முடியாது. மாறாக, மார்க்ஸ் சுட்டிக்காட்டும் வேறுபாடுகளை ஆய்வின் தொடக்கப்புள்ளியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் குறிப்புகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

இந்திய சாதி முறை பற்றி

1. “அனேகமாக எல்லா இடங்களிலும் வம்சாவழி கணங்கள், பகுதிவாரி கணங்களை விட காலத்தால் முந்தியவையாக இருந்தன. பகுதிவாரி கணங்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டன. அவற்றின் மிக தீவிரமான, மிகக் கறாரான வடிவம் சாதிய வரிசை ஆகும், அதில் ஒன்று மற்றொன்றிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கிடையே திருமண உறவுகள் இல்லை, அவற்றி்ன் உரிமைகளில் மிகவும் வேறுபட்டவை. ஒவ்வொன்றும் தனித்து ஒதுக்கப்பட்ட, மாற்ற முடியாத ஒரு தொழிலைக் கொண்டிருந்தன.” (குருண்ட்ரிச - ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)

(சாதியக் கட்டமைப்பு பற்றிய மிகச் சிறப்பான வரையறுப்பு]

2. "[ரோமானிய] அடிமைமுறையின் இந்தத் தன்மை கிழக்கத்திய பொது அடிமைமுறைக்குப் பொருந்தாது. இது ஐரோப்பிய கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது" [கிழக்கத்திய பொது அடிமை முறையிலிருந்து ரோமானிய அடிமை முறை வேறுபட்ட தன்மையிலானது].

3. "பெரும்பாலான ஆசியபாணி நில வடிவங்களில் இந்த சிறுசமுதாயங்களின் மேல் நிற்கும் ஒட்டுமொத்த ஒருமை [அரசன்] உச்சகட்ட உடைமையாளராகவும், ஒரே உடைமையாளராகவும் தோன்றுகிறது. உண்மையான சமுதாயங்கள் வெறும் பரம்பரை வழி பாத்தியதை உடையவர்களாகவே உள்ளனர்"

இந்திய சமூகத்தின் சாதிய கட்டமைப்பு அதைச் சிதைந்து போக விடாமல் நீடித்து இருக்கக் காரணமாக இருப்பது பற்றி

1. “(விவசாயத்தில் பாரம்பரிய உற்பத்தி முறை நீண்ட காலம் தொடர்கிறது. கிழக்கத்திய விவசாயமும் கைவினைத் தொழிலும் இணைந்த ஒருமையில் அது இன்னும் நீண்ட காலம் தொடர்கிறது)

2. “ஆசிய வடிவம் மிக விடாப்பிடியாகவும், நீண்ட காலமாகவும் பீடித்துக் கொண்டிருக்கிறது. தனிநபர் கம்யூனில் இருந்து சுயேச்சையாக இல்லை என்ற அதன் முன் கருதுகோளும், சுயமாக நீடிக்கும் உற்பத்தி, விவசாயமும், கைவினைத் தொழிலும் இணைந்திருப்பதும் என்ற முன் கருதுகோளும் ஆகும்."

3. "... ஆசிய வடிவத்தில், சுயேச்சையாக நீடிக்கும் விவசாயம் கைவினைத் தொழில் ஆகியவற்றின் ஒருமையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், போர் புரிந்து அண்டை பகுதிகளை கைப்பற்றுவது ஒரு அவசிய நிபந்தனையாக இல்லை. நிலவுடைமை அடிப்படையிலான விவசாயம் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தும் [ரோமானிய, ஜெர்மானிய] வடிவங்களில் அது அவசிய நிபந்தனையாக உள்ளது."

4. "இந்த சிறு கம்யூன்கள் அக்கம்பக்கமாக சுயேச்சையாக தேங்கிக் கிடக்கின்றன. அவற்றின் உள்ளே ஒரு தனிநபர் தனது குடும்பத்துடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உழைக்கிறார்."

எனவே, ஆசிய வடிவங்களில், குறிப்பாக ஒன்று மற்றொன்றிலிருந்து பிரிக்கப்பட்டிருந்த, அகமண உறவு முறையை பின்பற்றிய, ஏற்றத்தாழ்வான உரிமைகள் கொண்ட, தனித்தனியான தொழில்களைக் கொண்டிருந்த சமுதாயங்களினால் ஆன இந்திய வடிவம் நீடித்து நிலைப்பதாக இருந்தது.

எனவே, இந்திய சமூகத்தைப் பற்றி புரிந்து கொள்வதற்கு இந்த சமுதாயங்களை (சாதிகளை) ஆய்வு செய்ய வேண்டும். அது பற்றி சமூக மாற்றம், சாதி ஒழிப்பு என்ற கண்ணோட்டத்தில் முதன் முதலில் முறையான ஆய்வு செய்த அம்பேத்கரின் ஆய்வுகளை தொடக்கப்புள்ளியாகக் கொண்டு ஆய்வு செய்திருக்க வேண்டும்.

அதற்கு மாறாக, மார்க்சின் மதிப்பீடுகளையே காலனிய மாயையில் விளைந்தவை என்று ஒதுக்கித் தள்ளியதன் விளைவாக இன்று இந்த ஆசியக் கொடுங்கோன்மை ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து மக்களை நசுக்கிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைகளை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்

ஒரு சவர்ண ஹிந்து ஆணின் வாழ்க்கையின் துயரங்களும் குழப்பங்களும்

மார்க்ஸ்: மூலதனம் - அம்பேத்கர்: இந்திய வரலாற்றியல்