இந்தியா - ஜனநாயகப் புரட்சி - கம்யூனிஸ்ட் அரசியல்
இந்தியா போன்ற ஒரு நாட்டில் கம்யூனிசத்தின் சோசலிசத்தை நோக்கிய திட்டத்தின் ஒட்டுமொத்தமே ஜனநாயகப் புரட்சிதான், அதை மறுபரிசீலனை செய்தால், ஒன்று பெரும்பான்மை மக்களின் வர்க்கப் போராட்ட இயக்கத்தைப் புறக்கணித்து விட்டு காட்டுக்குள் போய் முடங்கலாம் அல்லது தேர்தலில் தி.மு.க அல்லது அ.தி.மு.விடம் இரண்டு இடங்களுக்கு பேரம் பேசுவதோடு மட்டும் திருப்தி அடைந்து கொள்ளலாம்.
YCL-இன் நோக்கம் பாட்டாளி வர்க்க ஜனநாயகப் புரட்சி, அதை இடைவிடாமல் அதோடு தவிர்க்கவியலாமல் இணைந்துள்ள சோசலிசப் புரட்சி. இந்தியாவில் பாட்டாளி வர்க்க ஜனநாயகப் புரட்சிக்கான அரசியல் அண்ணல் அம்பேத்கரின் அரசியல். அந்த அரசியலை 21ஆம் நூற்றாண்டு நிலைமைகளுக்கு தகவமைத்துப் பின்பற்றும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
எனவே, வி.சி.கவை ஆதரிப்பது YCL-இன் அரசியல் கோட்பாட்டு அனுபவத்திலிருந்து பெறப்படுவது. அதன் மீது வரும் விமர்சனங்கள் அதைப் புரிந்து கொள்ள விரும்பாததை அல்லது புரிந்து கொள்ள மறுப்பதைக் காட்டுகிறது. வரலாற்று சூனியவாதத்தில் (historical nihilism) வாழ்ந்து வரும் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக உள்ளது.
வரலாற்று சூனியவாதம் (historical nihilism) என்றால் என்ன?
ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, அரசியல் இவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஒரு குழுவாக இணைந்து கொண்டு நாங்கள் மட்டும் வலுவாகி விட்டால் பூமியையே புரட்டிப் போடுவோம் என்று பேசிக் கொண்டிருப்பது. அதாவது, எல்லா காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் அச்சு அசலாக பொருந்தும் வரலாறு உள்ளது (அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம்), எல்லா காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் அச்சு அசலாக பொருந்தும் திட்டம் (நிலப்பிரபு, பணக்கார விவசாயி, நடுத்தர விவசாயி, ஏழை விவசாயி - தரகு முதலாளி, தேசிய முதலாளி, கூலித் தொழிலாளி) உள்ளது என்று சாதித்துக் கொண்டிருப்பது.
இந்தியாவில் உழைக்கும் மக்களை சுரண்டும் அரசியல் பண்பாட்டு பொருளாதாரக் கட்டமைப்பாக ஆசியபாணி உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட (மார்க்சின் மதிப்பீடு) சனாதன நால்வருண படிநிலை சமூக அமைப்பு தொடர்கிறது. அது இந்திய உழைக்கும் மக்களில் நான்கில் ஒருவரை தீண்டப்படாதோராக ஒதுக்கி வைத்து ஒடுக்கி கொடூரமாக சுரண்டுவது; இந்துக்களில் நான்கில் மூவரை கல்வி, சொத்துடைமை, அரசியல் அதிகாரம் மறுத்து சூத்திரர் என்று இழிவுபடுத்துவது என்பதையும்
அந்த சனாதன இந்து மதத்துக்கு எதிரான போராட்ட மரபாக பௌத்தம் இந்திய வரலாற்றில் தொடர்கிறது என்பதையும் பார்க்க மறுப்பது
இந்த ஆளும் வர்க்க சுரண்டலை பிரதிநிதித்துவப்படுத்தும் பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ்இன் சனாதன பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தின் அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளையும் அரசியலையும் பயன்படுத்த மறுப்பது
இந்தியாவில் மனுதருமத்துக்கு எதிராக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கான போராட்ட ஆயுதமாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அதே வரலாற்று சூனியவாதத்தில் இருந்து "வர்க்க ஒடுக்குமுறைக் கருவி" என்று வறட்டுக் கோட்பாட்டுவாதம் பேசுவது.
எதிர்மறைகளின் எதிர்நிலையும் ஐக்கியமும் என்ற இயக்கவியலின் முதல்விதியைக் கூட பின்பற்றாமல் நிலவும் சமூக அமைப்பில் எதிரெதிர் கூறுகளின் இயக்கத்தைப் புரிந்து கொண்டு ஜனநாயகக் கூறை வலுப்படுத்தி ஜனநாயகத்துக்கு பகையான கூறுகளை வீழ்த்துவதை கையிலெடுக்காமல் படிப்பறைவாதிகளாகப் பேசிக் கொண்டிருப்பது
இவை அனைத்துயும் மொத்தமாக காவுட்ஸ்கிவாதம் என்றும் சொல்லலாம்.
இந்த வரலாற்று சூனியவாதிகள் கட்சி கட்டுவதிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களது வறட்டுக் கோட்பாட்டுக்கு ஒத்துவராத எதைப் பார்த்தாலும் பதற்றத்தோடு ஒப்பாரி வைக்கிறார்கள்.
அதாவது, எங்கள் கட்சியில் நிறைய பேரைச் சேர்த்து விட்டால் புரட்சியை நடத்தி விடுவோம். எங்களுக்கு போதுமான ஊழியர்கள் இல்லை, அப்படி இருக்கும் ஊழியர்களுக்கு பயிற்சி இல்லை. இந்த இரண்டும் இருந்தால் போதும் புரட்டிப் போட்டு விடுவோம் என்று பேசுகிறார்கள்.
அப்படிப் பேசுபவர்கள் எப்போதுமே கட்சிக்குள் ஆட்களை இழுப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். அதை விட மோசமாக, தமது கட்சிக்குள் சேர்ந்தவர்கள் மந்தையில் இருந்து தப்பி விடக் கூடாதே என்ற பதற்றத்திலேயே இருக்கிறார்கள்.
எனவே, சமூக நடைமுறையையும் சமூக மாற்றத்துக்கான தேவையையும் பேசும் அரசியலை எதிர்கொண்டவுடன் அவர்களுக்கு நிதானம் தவறுகிறது. அய்யய்யோ எங்க ஆட்களை எல்லாம் தூக்கிட்டுப் போகப் பார்க்கிறார்களே என்று கதறுகிறார்கள்.
உண்மையான கம்யூனிஸ்ட் அரசியல் வெகுமக்கள் அடித்தளத்தைக் கொண்டது, சமூக மாற்றம் என்பது கோடிக்கணக்கான மக்களின் புரட்சிகர இயக்கத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளாமல் அதனை ஒரு சிறுகுழுவின் சாகசச் செயலாக பார்க்கிறார்கள். எனவே, இந்தப் பதற்றமும் வாய்ச்சவடால்களும்
தங்களைப் போலவே மற்றவர்களையும் கருதிக் கொண்டு தங்கள் கண்ணாடி வீட்டின் மீதே கல்லெறிந்து கொள்கிறார்கள்.
இந்த நோய்க்கு ஒரே மருந்து, இந்திய சமூகம் பற்றிய மாமேதை மார்க்சின் மதிப்பீடுகளையும் அவற்றோடு இயைந்த அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளைக் கற்றுக் கொண்டு சரியான புரட்சிகரப் பாதையைப் பின்பற்றுவதுதான்.
கருத்துகள்
கருத்துரையிடுக