த.வெ.க - விஜய்: பாயாச அரசியல்
கேள்வி தி.மு.கவை தூக்கி சுமப்பது அல்லது தற்காப்பது என்பது இல்லை.
இன்றைக்கு மையமான கேள்வி பார்ப்பன பாசிச (சனாதன) பா.ஜ.கவை எதிர்ப்பது, குறைந்தது தடுத்து நிறுத்துவது
அதற்கான கூட்டணி இந்தியா கூட்டணி, அதில் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன, அவை எல்லாம் ஆளும் வர்க்கக் கட்சிகள்தான். வி.சி.கவும் உள்ளது.
விஜய்க்கு தரப்பட்ட அல்லது அவர் எடுத்துக் கொண்ட அசைன்மென்ட் இந்த பாசிச எதிர்ப்புக் கூட்டணியை உடைப்பது
- எனவே, பாசிசம் என்பதை நகைச்சொல்லாக்குகிறார் - பாசிசமா, பாயாசமா என்று?
- நான் ஆட்சியைப் பிடித்து உங்களுக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் தருகிறேன் என்று மிட்டாய் கொடுத்து தி.மு.க கூட்டணிக் கட்சிகளை கடத்த பார்க்கிறார்
- அதற்கு அம்பேத்கர், காமராஜர், பெரியார் என்று போக்கு காட்டுகிறார். அம்பேத்கரின் கொள்கைக்கு நேர் எதிரான பகவத் கீதையையும் சேர்த்துக் கொள்கிறார்.
இந்த நிலையில் பாசிச எதிர்ப்பையும் அதற்கான கூட்டணியையும் காத்து நிற்க வேண்டியது வி.சி.கவின் கடமை. அது தி.மு.கவுக்கு ஆதரவாகத் தெரிந்தால் அது பார்ப்பவர்களின் சிக்கல். பாசிச எதிர்ப்பில் தி.மு.கவும், பாயாசமாக என்று நக்கல் விடும் விஜயும் ஒன்றல்ல. தி.மு.கவும், அ.தி.மு.கவும் ஒன்றல்ல.
வி.சி.க தி.மு.க கூட்டணியில் இருப்பது பாசிச எதிர்ப்பு அரசியலைத் தூக்கிப் பிடிக்க. எனவே, அதை நீர்த்துச் செய்ய வைக்கும் எதற்கும் எதிர்வினை ஆற்றுவது இயல்பானது.
1. பாசிசம் என்பதை கொச்சைப்படுத்துவது - பாயாசம் என்று கிண்டலடிப்பதை உறுதியாக எதிர்க்க வேண்டும்
2. முன்னர் ம.க.இ.க செய்தது போல, எம்.ஜி.ஆர் பாசிஸ்ட், பிரபாகரன் பாசிஸ்ட், ஜெயலலிதா பாசிஸ்ட் என்று தாங்கள் யாரையெல்லாம் விமர்சிக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் பாசிஸ்ட் முத்திரை குத்துவதால் எந்தப் பயனும் இல்லை.
தி.மு.க முதலாளித்துவக் கட்சி. அது அரசு அடக்குமுறையை தொழிலாளிகள் மீது ஏவி விட்டது, ஏவி விடுகிறது. ஆனால், அது பாசிசம் ஆகி விடாது.
பாசிசம் என்பதற்கு சமூக வேர் வேண்டும். தி.மு.கவுக்கு அத்தகைய சமூக அடித்தளம் இருக்கிறதா? அல்லது பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ்-க்கு இருக்கிறதா?
தி.மு.கவுக்கு அத்தகைய சமூக அடித்தளம் இல்லை. பாசிசத்தை எதிர்க்கும் அடித்தளம்தான் தி.முக.வுக்கு உள்ளது. அதுதான் அந்தக் கட்சியின் துயரம். அதன் தலைவர்கள் முதலாளிகள், பண முதலைகள், ஆதரவாளர்களோ ஜனநாயக சக்திகள்.
3. இந்தத் தேர்தலில் தி.மு.க, அடுத்த தேர்தலில் அ.தி.மு.க, இடையில் விஜயகாந்த் அல்லது விஜய் என்று மாறிக் கொண்டே இருந்தால் மக்களுடன் ஐக்கியப்பட முடியுமா? மக்களுடனான ஐக்கியம் என்பது உறுதியான கருத்தியலில் இருந்து வருகிறது. அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் இருந்து வருகிறது.
அதற்கு அத்தகைய கருத்தியல் வலிமை வேண்டும், அந்த கருத்தியலில் உறுதியாக நின்று செயல்பட வேண்டும். அதை வி.சி.க செய்து வருகிறது.
4. விஜய் மேடையேறி பேசியவுடன் எல்லோரும் போய் அவருடன் இணைந்து கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டும், தி.மு.கவை எதிர்க்க வேண்டும் என்பது பத்திரிகையாளர் மணி போன்ற ’நடுநிலையாளர்களின்’ கனவு. அது யூடியூப் பேட்டி வரை பயன்படலாம். நடைமுறை அரசியலுக்கு உதவாது.
கருத்துகள்
கருத்துரையிடுக